×

மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வாகும் விதை சுழற்சிமுறை!

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் கோவர்த்தினி

இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை மாதவிடாய் பிரச்னைகள்தான். முகப்பருவில் தொடங்கி ஒழுங்கற்ற மாதவிடாய், வலிமிகுந்த மாதவிடாய், தைராய்டு, ப்ரீ மென்சுரல் சின்ட்ரோம், கருத்தரித்தலில் பிரச்னை என அவரவர் உடல் அமைப்பு மற்றும் வயதுக்கு ஏற்றவாறு ஒவ்வொருவிதமான பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர். இப்படிப் பாடாய்படுத்தும் மாதவிடாய் பிர்சனைகள் அனைத்துக்கும் தீர்வு தருகிறது விதை சுழற்சி முறை. இதனை Seed Cycling என்பார்கள். விதை சுழற்சி முறை என்றால் என்ன.. எவ்வாறு செயல்படுகிறது என்பதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் உணவியல் நிபுணர் கோவர்த்தினி.

விதை சுழற்சி முறை என்றால் என்ன?

பொதுவாக, பெண்களுக்கு மாதந்தோறும் நடைபெறும் மாதவிடாய் சுழற்சி சரியான முறையில் நடைபெற ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெட்டிரோன் என்ற ஹார்மோன்கள் தேவைப்படுகிறது. இந்த இரண்டு ஹர்மோன்களும் சமநிலையில் இருக்கும்போதுதான் மாதவிடாய் சுழற்சி சரிவர நடக்கிறது. இந்த சுழற்சிமுறை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது மாதவிடாய் நடைபெறுவதற்கு முன்பு 1-14 நாள்கள் ஒரு பகுதியாகவும்; மாதவிடாய்க்கு பிறகு 15 முதல் 30 நாள் வரை இரண்டாவது பகுதியாகவும் கருதப்படுகிறது.

இதில் முதல் பாதி ஃபோலிகுலர் என்றும் இரண்டாம் பாதி லுடீல் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஹார்மோன் சமநிலையில் இல்லாமல் ஏற்றத்தாழ்வாக இருந்தால் அதனை அமினோரியா என்று சொல்கிறோம். அதாவது, ஹார்மோன் சமநிலையின்மையால் ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் வராமல் இருத்தல், முகப்பரு, PCOS, தைராய்டு கோளாறுகள் மற்றும் நாள்பட்ட சோர்வு, மார்பக வலி, வலிமிகுந்த மாதவிடாய் போன்ற பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும், ப்ரீ- மென்சுரல் சின்ட்ரோம், கருத்தரித்தலில் பிரச்னைகள் போன்றவையும் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள விதை சுழற்சி முறை உதவுகிறது.

இந்த விதை சைக்ளிங் என்பது பூசணி, ஆளி, எள், சூரியகாந்தி ஆகிய நான்கு வகையான விதைகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்து அதாவது ஃபோலிகுலர் பகுதியில் இரண்டு வகையான விதைகளும், லுடியில் பகுதியில் இரண்டு வகையான விதைகளையும் தொடர்ந்து உண்டு வருவதாகும். இப்படி முறையாக விதைகளை உண்பது ஹார்மோன் நல்லநிலையில் செயல்பட உதவுகிறது. இதைத்தான் விதை சைக்கிளிங் என்று சொல்கிறோம். மாதவிடாய் நின்ற பிறகும் இந்த விதை சுழற்சியைப் பயன்படுத்தலாம்.

விதை சுழற்சியைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.மாதவிடாய் சுழற்சியின் இரண்டு முக்கியக் கட்டங்கள்முதல் கட்டம் – ஃபோலிகுலர் கட்டம், இது மாதவிடாய்க்கு முந்தைய 1- 14 நாட்கள் ஆகும்.இரண்டாவது கட்டம் – லூட்டல் கட்டம், இது மாதவிடாய் முடிந்த பின்பு வரும் 15-30 நாட்கள் ஆகும். பொதுவாக, ஹார்மோன் அளவுகள் சமநிலையில் இருக்கும்போது, சுழற்சியின் முதல் பாதியில் ஈஸ்ட்ரோஜன் அளவு உயரும். சுழற்சியின் இரண்டாவது பாதியில் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் அதிகரிக்கும். இந்த ஏற்றதாழ்வுகள், அடுத்த சில நாள்களில் சமநிலைக்கு வரவில்லை என்றால் ப்ரீ- மென்சுரல் சின்ட்ரோம், மாதவிடாய் பிடிப்புகள், முகப்பரு, ஒழுங்கற்ற சுழற்சிகள் போன்றவை ஏற்படுகிறது.

விதை சைக்கிளிங் எவ்வாறு பயன்படுத்துவது?

முதல் ஃபோலிக்குலர் கட்டத்தின்போது தினமும் 1-2 தேக்கரண்டி பூசணி மற்றும் ஆளி விதைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இரண்டாவது லூட்டல் கட்டத்தின்போது, 1-2 தேக்கரண்டி சூரியகாந்தி மற்றும் எள் விதைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். விதைகளைப் பவுடராக்கி கண்ணாடி ஜாரில் போட்டு ப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, தினசரி 1-2 தேக்கரண்டி நேரடியாகவோ அல்லது காபி, தயிர், ஓட்ஸ், பொரியல் போன்ற உணவு பொருளுடனோ சேர்த்தும் சாப்பிடலாம்.

ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் என்ன செய்வது?

ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட்டாலும் விதை சுழற்சியை இணைத்துக் கொள்ள முடியும்.மாதவிடாயின் நாள் கணக்கு தெரியவில்லை என்றால், பொதுவான வழிகாட்டுதலாக அமாவாசை, பெளர்ணமியை கணக்கில் வைத்து சாப்பிடலாம். அதாவது, அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரை 1-14 நாள்கள் பூசணி விதைகள் மற்றும் ஆளி விதைகளை சாப்பிட வேண்டும்.பெளர்ணமி முதல் அடுத்த அமாவாசை வரை 15-28 நாள்கள் வரை சூரியகாந்தி விதைகள் மற்றும் எள் விதைகளை சாப்பிட வேண்டும்.

விதைகளில் உள்ள ஊட்டச்சத்துகள்

ஆளி விதைகள் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களாகக் கருதப்படுகின்றன, இது இயற்கையாகவே ஆரோக்கியமான ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது. அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை பிணைக்க உதவும் லிக்னான்கள் எனப்படும் ஊட்டச்சத்து கூறுகளையும் கொண்டிருப்பதால் ஆளிவிதைகள் தனித்துவமானது. ஆளி விதைகள் லுடியல் கட்டத்தை நீட்டிக்கவும், அண்டவிடுப்பை மேம்படுத்தவும் மற்றும் மார்பகவலி மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பொதுவான ப்ரீ- மென்சுரல் சிண்ட்ரோம் (PMS) அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகின்றன.

எள் விதைகளில் லிக்னான்கள் உள்ளன, இது மாதவிடாய் சுழற்சியின் இரண்டாவது கட்டத்தில் புரோஜெஸ்ட்டிரோன் அதிகரிக்கும்போது அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனைத் தடுக்க உதவுகிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ரத்தத்தில் உள்ள லிப்பிடுகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஹார்மோன்களை மேம்படுத்துவதன் மூலம் எள் விதைகள் நன்மை செய்கிறது.பூசணி மற்றும் எள் இரண்டிலும் அதிக அளவு ஜிங்க் உள்ளது. இந்த தாது கருப்பையில் கார்பஸ் லியூடியம் உருவாவதை மேம்படுத்த உதவுகிறது. கார்பஸ் லுடியம் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்திக்கு பொறுப்பாகும் மற்றும் சாத்தியமான உள்வைப்புக்கான தயாரிப்பில் கருப்பையை தடிமனாக்க தூண்டுகிறது.

ஆளி மற்றும் பூசணி விதைகள்

இரண்டிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ஒமேகா-3 கருப்பையில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, புரோஜெஸ்ட்டிரோன் சுரப்பை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான செல் சவ்வுகளை பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக, வைட்டமின் ஈ ப்ரீ- மென்சுரல் சின்ட்ரோம் அறிகுறிகளைக் குறைப்பதில் இணைக்கப்பட்டுள்ளது. பூசணி, எள், சூரியகாந்தி மற்றும் ஆளி விதைகளில் காணப்படும் வைட்டமின் ஈ, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஆகியவை ஹார்மோன் உற்பத்தி மற்றும் நுண்ணறை செயல்பாட்டிற்கு அவசியமானவை ஆகும்.

சூரியகாந்தி விதைகளில் அதிகளவு கனிம செலினியம் இருக்கிறது, இது ஈஸ்ட்ரோஜன் குறைந்து, புரோஜெஸ்ட்டிரோன் உயரும் போது, லுடீல் கட்டத்தில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனைக் குறைக்க உதவுகிறது.

விதை சைக்ளிங் வேறு எந்த பிரச்னைகளுக்குத் தீர்வாகிறது?

உணவில் விதைகளைச் சேர்ப்பது ஹார்மோனின் ஆரோக்கியத்திற்கு அப்பால் உதவும். இந்த விதைகளை அளவோடு சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. விதைகளில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன, அவை கரு வளர்ச்சி, ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் பராமரிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைத்தல் போன்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. விதைகளின் நுகர்வு போதுமான கரையாத நார்ச்சத்து உட்கொள்ளலுக்கும் உதவும், இது செரிமானத்திற்கு உதவுகிறது.

ஆளி விதை சாப்பாட்டுக்கு முன் ரத்த சர்க்கரை, HbA1C மற்றும் இன்சுலின் ஆகியவற்றை மேம்படுத்தும். இது சர்க்கரை நோய்க்கு முந்தைய சிறந்த செயல்பாட்டு உணவாக உள்ளது.
ஆளி விதைகள் ஒரு பெண்ணின் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.பூசணி விதைகள் சிறுநீர்ப்பை பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை செய்யும்.எள் விதைகளில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. கறுப்பு எள் விதைகள் பொதுவாக பாரம்பரிய சீன மருத்துவத்தில் ரத்தத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன.

சூரியகாந்தி விதைகள் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் மூலமாகும். சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது வீக்கத்தைக் குறைக்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

The post மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வாகும் விதை சுழற்சிமுறை! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dr. ,Dietitian ,Govortini ,Dinakaran ,
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...